Friday, February 21, 2025

இத்தா - கீரனூர் ஜாகிர்ராஜா- வாசிப்பு குறிப்பு

 









நடைமுறை தேவை கருதி உருவாக்கப்பட்ட விதிமுறை சடங்காக ஆகும்போது காலத்தை கடந்து விடுகிறது. அது காலப்பொருத்தமின்மையால் தனிமனித வாழ்வில் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. சடங்குகள் மனித வாழ்வுக்கு பொருளளிப்பவை. ஆனால் காலந்தோறும் அவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும். பொது நன்மைக்கு ஊறுவிளைவிக்காத தனியுரிமைகளை மனிதகுலம் படிப்படியாக அங்கீகரித்து ஏற்றுவருவதே இயல்பு. 


கீரனூர் ஜாகிர் ராஜா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். சமீபத்தில் அவரது ‘இத்தா’ நாவலை  வாசித்து முடித்தேன். ‘இத்தா’ என்பது கணவர் இறந்துவிட்டாலோ பிரிந்துவிட்டாலோ அதற்கு பின் முஸ்லீம் பெண்கள் ஈடுபாடும் சடங்கு . தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும். மறுமணம் புரிந்துகொள்வதற்கு முன் கர்ப்பம் தரித்திருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு ஏற்பாடு. ஜாகிரின் நாவல் கோவை கலவரத்திற்கு பிந்தைய காலகட்டத்தை பேசுகிறது. திருமண நாளன்று ஆதரவற்ற பெண்ணான மரியத்தின் கணவன் நியாஸ் காவலர்களால் கைது செய்யப்படுகிறான். முஸ்லீம் என்பதாலேயே விசாரணையின்றி பலகாலம் அடைத்து வைக்கப்பட்டதை பற்றி சொல்லும் அதேவேளையில் உள்ளுக்குள்ளே புழங்கிய தீவிர போக்கையும் லேசாக கோடிட்டு காட்டுகிறது. நியாஸ் நிலை என்ன என்பது தெரியவில்லை. மரியம் நியாசின் பெற்றோர்களோடு சேர்ந்து நியாசின் வருகைக்காக காத்திருக்கிறாள். ஒரு அரசியல் சுழலுக்குள் சிக்கிய தனி மனுஷியின் கதை தான் இத்தா. ஜாகிரின் பெண் பாத்திரங்கள் பொதுவாக எப்போதுமே  மிகவும் வலுவானவை. மரியமும் அப்படியானவள். சொந்த மகனிடமிருந்து மாமனார் தலாக் பெற்று தருகிறார். ஆனாலும் ஜமாஅத் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மார்க்க நூல்களை துணைக்கு கொண்டு சமூக சேவகராக பஷீரையும் மாமனாரையும் எதிர்கொள்கிறாள். “எழுத்தாளரா  இருந்தாலும் சமூக சேவகராகவே  இருந்தாலும் ஆம்பளைங்க தந்திரசாலிங்க, சந்தர்ப்பவாதிங்க” என்று தான் மரியாதை வைத்திருக்கும் மாஷேவை விமர்சிக்கிறாள்.சிறுமியாக மரியம் ரஸுலுல்லாவை கனவில் சந்திக்கும் பகுதி முக்கியமானது. அவளுக்கு அவரிடம் சொல்வதற்கு ஏகப்பட்ட புகார்கள் இருந்தன. பெரியவளான பின் அவளால் கனவில்  கூட நெருங்க முடியவில்லை.  மரியம்மின் மாமியாரான ஆமினா பீவி மருமகளை விட முடியாமல் தவிக்கிறாள். மகன் மீண்டு விடுவான் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். மரியம்மின் நிலைக்காக மனமிரங்கவும் செய்கிறாள். இரண்டு மன்சூர்கள், இரண்டு நியாஸ்கள், இரண்டு காதர்கள் உண்டு. திரைக்கதையாக எழுதப்பட்டு நாவலாக மாற்றமடைந்து படைப்பு என்று ஜாகிர் குறிப்பிடுகிறார். அதற்கே உரிய சில எல்லைகளும் குழப்பங்களும் உண்டு. 1998 க்கு பிறகு நான்கு வருடங்களில் மரியம் இத்தா இருக்கிறாளா எட்டு  வருடங்களுக்கு பிறகு இருக்கிறாளா என்றொரு குழப்பம் ஏற்படுகிறது. 


ஜாகிர் எப்போதும் தனது கதைகளின் ஊடாக அமைப்புகளின் அதிகாரத்தை தனி மனிதரின் கோணத்திலிருந்து கேள்விக்குட்படுத்துபவர். ‘இத்தாவும்’ இதையே செய்கிறது. தமிழ் இஸ்லாம் எனும் அடையாளத்தை அவரது கதைகள் எப்போதும் முன்வைக்கும். இந்நாவலில் அத்தகைய உரையாடல்கள் உண்டு. மரியம்மின் தெங்குவிளை பகுதி பால்ய காலத்தை உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.


No comments:

Post a Comment