புத்தகங்கள்

Pages

Monday, January 20, 2025

பரலோக வசிப்பிடங்கள்- குறிப்பு

 நான் அனைத்து வாசகர்களின் அன்பிற்குரிய எழுத்தாளனாக வேண்டும். அப்புறம் கடற்கரையிலுள்ள ஒரு சுக வாசஸ்தலத்தில் வசிக்க வேண்டும். சகல உலகங்களிலிருந்தும் இலக்கிய ரசிகர்கள் என்னை தேடி வரவேண்டும். என் அறையின் உப்பரிகையிலிருந்து கடலைப் பார்த்தவாறு விலை உயர்ந்த மது அருந்தி, சிகரெட்டின் பொற்புகையை ஊதி விட்டவாறு நான் ஓய்வெடுக்க வேண்டும். இடையில் நீ என்னைப் பார்க்க வரவேண்டும். இதுதான் எனக்குப் பிடித்த கனவு.




தாமஸ் ஜோசப் எழுதிய ‘பரலோக வசிப்பிடங்கள்’ நாவலில் இறந்து போன பிறகு எழுத்தாளன் ஆல்பர்ட் காணும் கனவிது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களின் கனவும் இதுதான் என்று எண்ணி கொண்டேன். தோல்வியடைந்த எழுத்தாளனை பற்றிய கதை. ஆல்பர்ட் புவியில் தனது நாவலை பதிப்பிக்க முடியாமல் பரலோகம் சென்றடைகிறான். “அறியப்படாத எழுத்தாளனுக்கு பூமியில் இருந்த விதி பரலோகத்திலும் தன்னைப் பின்தொடரும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. எழுத்தின் வழியினுடாக பயணம் தன்னை எங்கே கொண்டு சேர்க்கும் என்று அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு நிழலை பிடிப்பதற்கான பயணமாக இருந்தது என்று தோன்றியது.” ஏழுலகங்களில் ரயில்களில் பயணித்தபடி எழுதுகிறான். எழுதிய நாவலை பரலோகத்தில் பதிப்பிக்க முயல்கிறான். அவனுடைய நாவல் கடவுளை கதைமாந்தராக கொண்டது. நாவலில் கடவுள் கைவிடப்பட்டவராக ஆற்றல் அற்றவராக அலைந்து திரிகிறார். காதலின் பித்தேறி தனது கடமைகளில் இருந்து தவறுகிறார்.  கடவுள் நேசிப்பது ஆல்பர்ட்டின் மனைவி லில்லினாவை. சரியாக சொல்வதானால் அவளது இசையை. வழுக்கை தலை கடவுளின் குழிவிழுந்த கன்னத்தில் புனித முத்தத்தை சமர்ப்பிக்கிறாள் லில்லினா. பரலோகத்தின் அடுக்குகளுக்கு சென்றுவரும் ரயில் எனும் கற்பனையே அபாரமாக உள்ளது. இறந்தவர்கள் புழங்கும் உலகிற்கு உயிருடன் இருப்பவர்கள் தங்கள் கனவுகளில்  புழங்கி செல்கிறார்கள். 


நாவலில் சில அபாரமான கதை மாந்தர்களை எளிய சொற்களில் துலங்க செய்கிறார் தாமஸ். ஆக்நஸ், நடாஷா ஆகிய இரு பெண்கள் மரணத்திற்கு பின்பு ரயில்களின் பயணிகள் பட்டியலை சலிப்பின்றி தட்டச்சு செய்து கொண்டே இருப்பவர்கள். பூவுலகில் போலீசாக முடியாத ஆண்டனி பரலோகத்தின் வாயில் காப்பாளனாக ஆகிறான். சிறுவனாக பரலோகம் வந்தடைந்த ரூபன் அங்கே ஆட்டோ ஓட்டுகிறான். நாவலில் என்னை வெகுவாக தொந்தரவு செய்த சித்திரம் ஒன்றுண்டு. பதிப்பக தொழில் நடத்தி பெரும் கடனாளியான ரபீக் சக்காரியா பரலோகத்தில் இறந்தோருக்கான பதிப்பகத்தை நடத்தி வருகிறார். பூமியில் அவர் பதிப்பித்து விற்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் பக்கங்களை கிழித்து அவரது பிள்ளைகள் விடும் காகித ராக்கெட்டுகள் அவர் காலடியில் நைவேத்தியமாக சேர்கின்றன. சூசன்னா ஆல்பர்ட்டை நேசிக்கிறாள். நேசத்திற்காகவும் எழுதிற்காகவும் ஆல்பர்ட் பரலோகத்தில் நாய்களால் கொல்லப்பட்டு இறந்து மீள்கிறான். நாவலில் இன்னொரு ஆல்பர்ட் குறிப்பிடப்படுகிறார். கடவுளை புகழப்படும் செல்வாக்கு கொண்ட ஆல்பர்ட். ஏறத்தாழ இவனுக்கு எதிர்நிலை. அல்லது இவனுடைய மாற்று ஆளுமை, கனவு. சமரசங்கள் ஊடாக திறக்கும் கடாஹவுகளில் அவன் சென்று சேர்ந்திருக்கக்கூடிய இடமாக கூட இருக்கலாம். சூசன்னா ஆல்பர்ட்டுக்கு பரலோகத்தில் எல்லாவற்றையும் அளிக்க சித்தமாயிருக்கிறாள். பதிலுக்கு அவள் கோருவதெல்லாம் ஆல்பர்ட்டின் காதலி தான். அவள் ஏமாற்றியதாக உணரும்போது ‘உன்னால் அந்திகளையும் கலைகளையும்  பார்க்க முடியாது’ என்று ஆல்பர்ட்டை சபிக்கிறாள். உண்மையில் மிக கொடூரமான சாபம். வாழ்வின் அத்தனை நெருக்கடிகளையும் கடந்து போகும் வலிமையை இயற்கையிடமிருந்தே பெறுகிறோம். இன்னொரு விடியலுக்கான நம்பிக்கையே நம்மை நகர்த்துகிறது. அது மறுக்கப்படுவதை விட கொடூரமான தண்டனை வேறிருக்க முடியாது. நாவலை வாசித்து முடித்ததும், யார் தோல்வி அடைந்த எழுத்தாளர் என்றொரு கேள்வி எழுந்தது. எழுத்தாளர் எழுத்தை கைவிடும் போது மட்டும் தான் தோல்வியடைகிறார். எழுதிக் கொண்டிருக்கும்வரை அவை அங்கீகரிக்கப்பட்டாலும், போடாவிட்டாலும், வாசிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அவர் தோல்வியடைந்தவர் அல்ல. போலண்யோவின் சாவேஜ் டிடிடெக்டிவ்ஸ் நாவலில் ஆர்டுரோவும் அவனது நண்பனும் தேடி செல்லும் காணாமல் போன மூத்த பெண் எழுத்தாளர் ஊருக்கு வெளியே பதிப்பிக்க கூட விரும்பாமல் எழுதி குவித்திருப்பாள். இயல்பிலேயே கவித்துவமான மொழி கொண்ட நாவல் என்பதால் யூமாவின் மொழியாக்கம் பொருந்தி வருகிறது. 


பரலோக வசிப்பிடங்கள் 

தாமஸ் ஜோசப் 

தமிழில் யூமா வாசுகி 


No comments:

Post a Comment