Monday, August 12, 2024

புக் பிரம்மா இலக்கிய விழா

 

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாவண்ணன் ஆகஸ்ட் 9, 10, 11 தேதிகளில் பெங்களூரில் புக் பிரம்மா இலக்கிய விழா நடக்க இருப்பதாகவும் சிறுகதை அமர்வில் பேச முடியுமா என்றும் கேட்டார். ஒப்புக்கொண்டேன். இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்பது எனக்குப் பிடிக்கும். வேறெதைப் பற்றிய  சிந்தனையுமின்றி   இலக்கியத்திற்குள்ளேயே ஊறிக் கிடப்பது. இரவுகளில் உறங்க முடியாது. உருபெறாத சொற்களும் கருத்துக்களும் மூளைக்குள் ரீங்காரமிடும் இனிய அவஸ்தை பீடிக்கும். இலக்கியத்தை பேசுவதும் கேட்பதும் அசைபோடுவது ஒரு அலாதியான லாகிரி.  விஷ்ணுபுர விழாக்களில்  காவிய முகாம்களில் அத்தகைய அனுபவத்தை‌ வேண்டியே தவறாமல் செல்வேன். அண்மைய காலத்தில் ஏலகிரி புரவி கூடுகை இத்தகைய தீவிர அனுபவத்தை அளித்தது. 


எட்டாம் தேதி இரவு புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை பேருந்தில் சென்று சேர்ந்தேன். எனக்காக அவர்கள் பதிவு செய்தது குளிர்சாதன வசதியும்  படுக்கை வசதியும் கொண்ட பேருந்து. ஆனால் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே குளிர்சாதன பேருந்து இயக்கப்படுவதாக சொல்லிவிட்டார்கள். மடிவாலாவில் கமலாலயன் என்னுடன் இணைந்து கொண்டார்.  கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் கலையரங்கத்தில் நிகழ்வு நடந்தது. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  மல்லிப்புரம் ஜெகதீஷ் குமாருடன் அறையை பகிர்ந்து கொண்டேன். ஜெகதீஷ் சவரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த தெலுங்கு எழுத்தாளர். அவர்கள் ஓரிஸா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்கிறார்கள். பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது மகள் ஆயுர்வேதம் பயில்வதாக சொன்னார். 


தமிழகத்திலிருந்து ஒரு பட்டாளமே வந்திருந்தது. எழுத்தாளர் கமலாலயன், கவிஞர் சுகிர்தராணி, நாவலாசிரியர் பா. கண்மணி, கவிஞர் சுஜாதா செல்வராஜ் ஆகியோரை முதன் முறையாகச் சந்தித்தேன். எழுத்தாளர் அபிலாஷும் பல்லவியும் இரண்டு நாட்கள் வந்திருந்தார்கள். பெங்களூரில் வசிக்கும் யாத்ரா நீலா எனும் பெயரில் எழுதி வரும் மனோஜ், நண்பர் ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா ஆகியோருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. ஸ்டாலின் ராஜாங்கம் பல நாட்களாக கேட்டு துரத்திக் கொண்டிருந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தார். நாவலுக்கு வேண்டிய சில ஆவணங்கள் குறித்து அண்ணனுடன் உரையாடினேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யும் ஜனனி கண்ணன், சியாமளா, ராதிகா, ப்ரியம்வதா, சுசித்ரா, ஐஸ்வர்யா  ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ ஒரு இயக்கம் போல தமிழ் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை எனும் நம்பிக்கை ஏற்பட்டது. ஜனனியும் ராதிகாவும் தொழில்முறை ஆர்க்கிடெக்டுகள். ஐஸ்வர்யா கல்லூரி பேராசிரியர் என்பதால் வண்டி வைத்து முப்பது மாணவர்களை அரங்கிற்கு அழைத்து வந்திருந்தார். சுசித்ரா விஞ்ஞானி, பிரியம்வதா பட்டய கணக்காளர். வெவ்வேறு தொழில் பின்புலம் கொண்டவர்கள் மொழியாக்கத்தை ஈடுபாட்டுடன்  செய்து வருகிறார்கள். எழுத்தாளர் சர்வோத்தமன் வந்திருந்தார். பிள்ளை வளர்ப்பு சார்ந்த பிலாக்கணங்களை பகிர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டோம். மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பியுடன் அவர் மொழியாக்கம் செய்த ‘ஓடை’ நாவல் குறித்து பேசினேன். அண்மையில் வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று. பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷம்’ ஜீரோ டிகிரி வெளியீடாக வந்துள்ளது. பணி ஓய்வுக்கு பின் மொழியாக்கம் செய்யத் தொடங்கி பத்தாண்டுகளுக்குள் ஐம்பத்தி மூன்று நூல்கள் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக செய்திருக்கிறார். இது ஐயமின்றி ஒரு சாதனை. இப்போது சொந்தமாக நாவல் எழுத விரும்புவதால் மொழியாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார். தீபு ஹரி, எம். கோபாலகிருஷ்ணன், கார்த்திக், சு. வேணுகோபால், கயல் ஆகியோருடன் அமர்ந்து தமிழில் நடக்கும் இலக்கிய போட்டிகள் பற்றி ஒரு விவாதம் நடந்தது. தமிழ் சினிமாவில் நீதிபதியாக நடிக்கத்  தொடங்கினால் சாகும்வரை அதே பாத்திரம்தான். அந்த நிலைமை சு. வேணுகோபாலுக்கு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் ஏற்பட்டது. அத்தனை போட்டிகளுக்கு நடுவராக உள்ளார்.‌ நண்பர் ‘பாகேஸ்ரீ’ எஸ். சுரேஷ் இந்துஸ்தானி இசையை பின்புலமாக கொண்ட ‘கரானா. எனும்  நேரடி ஆங்கில நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் எழுதும்போது இதன் வடிவம் சார்ந்து சிலமுறை உரையாடியிருக்கிறேன். கீதா ராமசாமியின் ‘ஹைதராபாத் புக் ட்ரஸ்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பிரதியை கீதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். எஸ். சுரேஷ் முதல்நாள் வந்திருந்தார். சாகித்திய அகாதமியில் முக்கிய பங்காற்றும் நண்பர் ராஜ்மோகன் அவர்களை இரண்டாம் நாள் மதியம் சந்தித்தேன். பெரிதாக உரையாட முடியவில்லை. கனிஷ்கா குப்தா, கண்ணன், பெருமாள் முருகன் ஆகியோருடன் கொஞ்ச நேரம் பேசினேன். நண்பர்கள் கார்த்திக்,  சுரேஷ் பிரதீப், காளி, ஜீவா, இரம்யா. சாம்ராஜ் ஆகியோருடன் நிறையவே பேச முடிந்தது. சேர்ந்து அமர்வுகளுக்கு சென்றோம். எழுத்தாளர் விஷால் ராஜா, ஓவியர் ஏ.வி. மணிகண்டன், கிருஷ்ணபிரபா ஆகியோர் வந்திருந்தனர். என்னுடன் யுவ புரஸ்கார் வாங்கிய கன்னட எழுத்தாளர் பத்மநாப பட், பல ஆண்டுகளுக்கு முன்  சந்தித்த கன்னட எழுத்தாளர் விக்ரம ஹத்வாரா ஆகியோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை கேட்வே இலக்கிய விழாவில் என் அறைத் தோழராக இருந்த வேம்பள்ளி ஷெரீபும் வந்திருந்தார். ஷெரீப் ‘ஜும்மா’ என்றொரு சிறுகதை தொகுதி எழுதியுள்ளார். ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். இப்போது பத்திரிக்கையாளராக பணியாற்றுகிறார். இஸ்லாத்தின் உள்ளூர் பண்பாட்டு வேர்களைப் பற்றி பேசுவதால் ஜாகிர்ராஜாவுடன் ஒப்பிடத்தக்க எழுத்தாளர் என புரிந்துகொண்டேன். ஜீரோ டிகிரி ராம்ஜியுடன் ஆங்கில பதிப்பு சூழல் குறித்து உரையாடினோம். நம்பிக்கை தருவதாக ஏதுமில்லை. நம் பணி எழுதுவதே என்பதை நினைத்துக்கொண்டேன். 

       

‘புக் பிரம்மா’ நிகழ்வின் முதன்மை அனுபவம் என அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்த்துக்கலைகளைச் சொல்லலாம். முதல் நாள் மானஸி சுதிர் குழுவினர் கன்னட கவிதைகளை நடித்தும் பாடியும் காட்டினார்கள். தென்னக மொழிகளில் கன்னடமே கவனிக்கச் சிரமமாக உள்ளது என்பதை கண்டு கொண்டேன். எனினும் இசையும் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கன்னடத்திலும் மராத்தியிலும் வலுவான நவீன நாடக மரபு உண்டு. நடிகர் பிரகாஷ் ராஜ் நிர்திகந்தா எனும் நாடகப் பள்ளியை மைசூரில் நடத்தி வருகிறார். டாக்டர் ஸ்ரீபாத் பட் கவிதைகளுக்கு இசையமைத்து அரங்கேற்றினார். முதல்நாள் டாக்டர் பட் இன்னொரு குழுவினரைக் கொண்டு வசன கவிதைகள், கன்னட இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டத்தின் கவிதைகளை ‘கன்னட காவிய காஞ்சா’ எனும் நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டினர். அதில் பாடிய பெண்ணின் குரல் அணன்யா பட்டின் குரலையும் வீச்சையும் நினைவுப்படுத்தியது. ‘பரா பரா பரா பிரம்மராக்ஷசா’ எனும் கோரஸ் குரல் இப்போதும் மனதில் உள்ளது. நானும் கார்த்திக் பாலசுப்பிரமணியனும் நிகழ்த்துக்கலை எவற்றையும் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசி நாள் மதியம் பரதநாட்டியம் மட்டும் தவறவிட்டோம். 


இரண்டாம் நாள் சுரேஷ் பிரதீப்பும் இணைந்து கொண்டார். இரண்டாம் நாள் காலை பிந்து மாலினியின் இசை நிகழ்ச்சி. தன்னை உஸ்தாத் ரஷீத்கானின் சீடர் எனக் கூறினார். அவரது கணவர் தான் பாடகர் வாசு தீக்ஷித் என  அறிந்துகொண்டேன். வாசு பாடிய ‘ராகி தந்திரா’ எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று. வெவ்வேறு மொழிகளில் இருந்து இசைத்தார். ‘அருவி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன் நெஞ்சே’ பாடலை நான் இதுவரை கேட்டிராத புதிய மெட்டில் பாடினார். 


உள்ள நிறைவிலோர் 

கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! 


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! 



இவ்வரிகளை அவர் பாட கேட்ட போது வெளியே இருக்கும் பகைவர்களை விட உள்ளே இருக்கும் பகைவனை அருள்வழி மீட்க கோருகிறார் பாரதி எனப் புரிந்துகொண்டேன். அத்வைத  வேதாந்தியாக பாரதியின் பாடலை இப்படியும் பொருள் கொள்ள இடமுண்டு. தனது இழிவுகளை கருணையுடன் அணுகுவது அத்தனை எளிதல்ல. நிகழ்வு முடிந்ததும் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசினோம். பெங்களூரிலும் சென்னையிலுமாக இருப்பதாக சொன்னார். முன்னரே மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் கபீர் கவிதை வெளியீட்டு விழாவில் இவர் முழுக்க முழுக்க கபீர் பாடல்களை பாடியதாக எம். கோபாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். ஏகதாரா போன்ற ஒரு தந்தி வாத்தியத்தை மீட்டியபடி வேறெந்த பக்கவாத்தியங்களும் இல்லாமல் அபாரமாக பாடினார். மதியம் கிடார், பாஸ் கிடார், டிரம்ஸுடன் ஒரு கவிதை நிகழ்த்துக்கலை அரங்கை நிர்திகந்தா வழங்கினார்கள். மூன்றாம் நாள் பிரகாஷ்ராஜ் இதே குழுவினருடன் கவிதை வாசிப்பு ஒன்றை நிகழ்த்தினார். தமிழில் இருந்து ஆதவன் தீட்சன்யா, முகுந்த நாகராஜன், விடுதலை சிகப்பி ஆகியோரின் கவிதைகளை அவருக்கே உரிய முறையில் வாசித்தும் நடித்தும் காட்டினார். அதே பேசு பொருள் உள்ள வெவ்வேறு மொழிக் கவிதைகளை கோர்த்து ஒன்றாக்கி வழங்கிய முறை சிறப்பாக இருந்தது. இத்தகைய நான்கு மொழி திருவிழாவிற்கு அவர் சரியான பிரதிநிதியும் கூட. ‘நீங்கள் ஏன் அரசியல் இல்லாமல் எழுதக்கூடாது’ எனும் கவிதை, பிரெக்டின் ‘பிரமிடுகளை யார் கட்டியது?’ ஆகிய‌ கவிதைகள் வாசிக்கப்பட்டன.  ஸ்ரீ ஸ்ரீயின் தெலுங்கு கவிதையை ஆவேசமாக வாசித்த போது  புல்லரித்தது. போராட்ட கவிதைகளும் அரசியல் கவிதைகளும் இயல்பிலேயே நிகழ்த்துக்கலைக்கு அணுக்கமாக உள்ளதாக  தோன்றியது. தமிழைப் பொறுத்தவரை ரவி சுப்பிரமணியம் சில கவிதைகளுக்கு ராகங்களின் அடிப்படையில் இசையமைத்துள்ளார். கூத்துப்பட்டறை சில கவிதைகளை நடித்திருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். மேற்சொன்ன பாணியிலான நவீன இசையமைப்பை முயன்று பார்க்கலாம் எனத் தோன்றியது. எல்லா கவிதைகளுக்கும் இசையமைக்க முடியாது. ஆத்மாநாம் கவிதைகளை ஜாஸ் இசைப் பாணியில் கேட்டால் சிறப்பாக இருக்கும் எனும் எண்ணம் தோன்றியது. இரண்டாம் நாள் மாலை ஆர். கே. பத்மநாபா அவர்களின் கர்நாடக இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரந்தரதாஸர், பாபநாசம் சிவன், தியாகராஜரின் பாடல்களை பாடினார். மயில், குதிரை, மணியோசை என வெவ்வேறு தானங்களை பாடிக்காட்டினார். கலையின் ஊற்று இயற்கையை நகலெடுப்பது தானோ எனும் கேள்வி எழுந்தது. மூன்றாம் நாள் காலையில் பண்டிட் வெங்கடேஷ் குமாரின் இந்துஸ்தானி கச்சேரி சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடந்தது. இந்த இலக்கிய விழாவின் சிகர அனுபவம் இதுதான். ஆயிரம்பேர் கொள்ளளவு கொண்ட கலையரங்கம் முழுமையாக நிரம்பியிருந்தது. மியாங் கி தோடியையும், ஜான்பூரி ராகத்தையும் விரிவாகப் பாடினார். அக்கா கேளவ்வா எனும் அக்கம்மாதேவி பாடல் நாட்டுப்புற மெட்டில் பாடியபோது மொத்த அரங்கமும் ஆட்கொள்ளப்பட்டது. ‘அக்கா கேளவ்வா மன்சூர் பாடி பிரபலப்படுத்தியது. கொல்கத்தா சென்றபோது அங்கே இந்த பாடலை பாடச்சொல்லி கேட்டார்கள். இசைக்கு மொழி கிடையாது’ என்றார்.‌ வெங்கடேஷ்குமாரை இணையத்தில் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் நேரில் கேட்கும் அனுபவம் என்பது முற்றிலும் வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே நான் நேரில் கேட்கும் முதல் இந்துஸ்தானி கச்சேரி. எங்கெங்கோ அழைத்துச் சென்றது. பாடும்போது வெங்கடேஷ் குமாரின் கை அடவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை நடனம் போல இருந்தன. அல்லது அவருடலே மீட்டப்படுவதான எண்ணம் ஏற்பட்டது. நேரில் இசை கேட்கும்போதெல்லாம் நாம் எத்தனைச் சிறியவர்கள் எனும் உணர்வு எப்போதும் ஏற்படும். அப்போது, அங்கே, நாளையற்று நிகழும் இசை எழுத்தை விட மேலானது என தோன்றும். இசையின் தற்காலிகத்தன்மையே அதை அரிதாக ஆக்குகிறது. 



இறுதி நாள் மாலையில் யக்ஷகானம் நடந்தது. கெரெமனே சிவானந்த ஹெக்டே குழுவினர் வழங்கினார்கள். யக்ஷகானமும் கதகளியும் செவ்வியலும் நாட்டார் தன்மையும் கச்சிதமாக முயங்கிய வடிவம் என்றார் ஜெயமோகன். கதகளியை இணையத்தில் பார்க்க முயற்சித்துள்ளேன். நிகழ்த்துக்கலைகள் நேரில் பார்க்காமல் ருசிக்காது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கே உரிய பெரும் வீச்சுடைய குரலில் பாடினார்கள். ராமன், இலட்சுமணன், சீதை தண்டகாரண்யத்தில் குடிலமைத்து வசிக்கும்போது சூர்ப்பணகை ராமனை காமுறுகிறாள். அவன் மறுத்து இலட்சுமணனிடம் அனுப்புகிறான்‌ அவன் கோபப்பட்டு மூக்கை அறுத்துவிடுகிறான். இதுதான் நாடகம். இராமனுக்கும் சீதைக்குமான உரையாடலும் இராமனுக்கும் சூர்ப்பனகைக்குமான உரையாடல்களும் எள்ளல் நிறைந்ததாக இருந்தது. அரக்கியாகவும் அழகியாகவும் வரும் சூர்ப்பணகை பார்வையாளரின் பாராட்டைப் பெற்றார். அரக்கி சூர்ப்பணகையின் நடிப்பை கவனித்தபோது தான் ரஜினியின் வில்லன் நடிப்பு எங்கே வேர்கொண்டுள்ளது என்பதை கவனிக்க முடிந்தத. ரஜினி இளமையில் யக்ஷகானத்தில் நடித்திருக்கிறார். சூர்ப்பனகையின் அட்டகாச சிரிப்பும் நடையும் ரஜினியை எனக்கு நினைவுபடுத்தியது.


 இந்திய அழகியல் பற்றி சொல்லும்போது செவ்வியலுக்குள்  நாட்டார் தன்மையும் நாட்டார் தன்மைக்குள் செவ்வியலும் முயங்கி இருக்க வேண்டும் என்றார். இந்நாடகத்தில் ராமனின் தங்க கிரீடத்தின் உச்சியில் நான்கு மயிற்பீலிகள் இருந்தன. சூர்ப்பனகையின் கிரீடம் முழுக்கவே மயிற்பீலிகளால் ஆனதாக இருந்தது. தங்க மகுடம் செவ்வியல் என்றால் மயிற்பீலி நாட்டார். கண்ணன் சூடும் ஒற்றை மயிற்பீலி அவனை பித்தனாகக் காட்டுகிறது. சமநிலையில் கொஞ்சம் பித்தை அணிந்தவன். யக்ஷ கானத்தைக் காணும் போது வேறு சில எண்ணங்களும் தோன்றியது. சீதை மட்டுமே ராட்சசர்களின் குரல்களை கேட்கிறாள். அஞ்சி அபயம் வேண்டுகிறாள். மொத்த நாடகத்திலும் அசுவாரசியமான பாத்திர வார்ப்பாக உள்ளவள் சீதைதான். ராமனிடம் அபயம் வேண்டும் பேதை . அவ்வளவுதான் அவள் பங்கு. நேர்மாறாக சூர்ப்பணகை கட்டற்றவள். பசியும் வேட்கையும் கொண்டவள். இந்த நாடகத்தில் சூர்ப்பணகையை சீதையின் மாற்று ஆளுமையாக உளவியல் கோணத்தில் காண இடமுள்ளதாக தோன்றியது. சூர்ப்பனகையின் வருகையை சீதையே முன் உணர்கிறாள். சூர்ப்பணகை வந்தபிறகு அவளின் முன் எதையுமே பேசவில்லை. இது பல சாத்தியங்களை கிளர்த்தியது.  அழகியாக மாறிய சூர்ப்பணகை ஏறத்தாழ சீதையின் அதேவிதமான ஆடை அணிகளை அணிகிறார்.  ‘தி.ஜாவின் கதையுலகில் அத்தனை குலபெண்டிருக்குள்ளும் பரத்தையர் இருக்கிறார்கள். ஜி. நாகராஜன் கதையுலகில் அத்தனை பரத்தையரிலும் குலப்பெண்டிர் உள்ளார்கள் என்பதே  என் அவதானிப்பு’ என யுவன் சந்திரசேகர் கூறியது நினைவுக்கு வருகிறது. குரல் கேட்பது, சமூக பொதுவரையறைக்கு பொருந்தாத இச்சைகளையும் நடத்தைகளையும் வெளிப்படுத்துவது ஆகியவை பிளவாளுமையில் முக்கியமான அறிகுறிகள். இந்திய ஆழ்மனதில் இந்த குலப்பெண்டிர் பரத்தையர் இருமை இன்றுவரை வெளிப்படுவதாக தோன்றியது.  சினிமாக்களில் நாணமுடைய பாந்தமான நாயகி கனவுகளில் கவர்ச்சி நடனம் புரிவார். தெலுங்கு சினிமாக்களில் இரண்டு நாயகிகள் உள்ள திரைப்படங்கள் அண்மைய காலம் வரை உண்டு. படையப்பா நீலாம்பரி சூர்ப்பனகை என்றால் சவுந்தர்யா சீதை. சூர்ப்பணகையை சீதையின் இன்னொரு சாத்தியம் என வாசித்தால் புனைவாக வேறொரு கோணத்தில் ராமாயணத்தை எழுத முடியும் எனத் தோன்றியது. 




போபால், சிம்லா, சிங்கப்பூர், டெல்லி என பல்வேறு இலக்கிய விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். வெளியிடங்களில் வேற்று மொழி அரங்குகளுக்கு செல்வதே வாடிக்கை. பிற மொழிகளில் என்ன நிகழ்கிறது என்பதை கவனிப்பேன். இது ஒரு கற்றல் அனுபவம் என்பதால் அமர்வுகளைத் தவிர்த்துவிட்டு ஊர் சுற்றவதில் எனக்கு பெரிய நாட்டமிருப்பதில்லை. பல்வேறு மொழியினருடன் உரையாடுவதும் அவர்கள் மொழியில் என்ன நிகழ்கிறது என்பதையும் அரைகுறை இந்தியையும் ஆங்கிலத்தையும் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிப்பேன். இத்தகைய கூடுகைகளில் சந்திப்பவர்களுடனான உறவை  தொடர்ந்து பேணும் தெம்பு எனக்கு பொதுவாக கிடையாது. மீண்டும் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். தமிழைப் பொருத்தவரை காளிப்ரஸாத், இரம்யா, கயல், சுரேஷ் பிரதீப் பங்கேற்ற மொழியாக்க அமர்விலும், ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தாராணி, கமலாலயன் பங்கேற்ற தலித் இலக்கியம் தொடர்பான அமர்விலும் பார்வையாளராக பங்கேற்றேன். மொத்தமே 50 நிமிடங்கள் என்பதால் கேள்வி பதில்களுக்கு நேரமில்லை. எங்கள் அமர்வில் இயக்குனர் வசந்தும் பிரகாஷ்ராஜும் பார்வையாளர்களாக பங்கேற்றார்கள். 


‘இந்திய பதிப்புத்துறை நிலவரம்’ பற்றிய அரங்கில் காலச்சுவடு கண்ணன், வசுதேந்திரா, கீதா ராமசாமி. டி சி புக்ஸ் ரவி ஆகியோர் பங்கு கொண்ட அமர்வில் ஒவ்வொரு மொழியிலும் பாதிப்பு நிலவரம் பற்றி பேசப்பட்டது. இளையவர்கள் புத்தங்கள் படிப்பதில்லை என எவரேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு வயதாகிவிட்டது இளையவர்களுடன் தொடர்பில் இல்லாமல் உள்ளார்கள் என்றாகிறது என்றார் கண்ணன். இந்த உரையாடலில் மலையாள சூழலைப் பற்றி டிசி ரவி பேசியவை வியப்பையும் நம்பிக்கையையும் அளிப்பவை. கொரோனா காலத்தில் புத்தக விற்பனையை தக்கவைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட நூதன முயற்சிகளை பற்றி சொன்னார். ஸ்விக்கியுடன் ஒப்பந்தம் செய்து உணவுடன் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. புத்தகங்களை ‘அத்தியாவசிய  பொருட்களாக’கேரள அரசு கருதியது என்றார். புத்தகக் கடை, சலூன், வொர்க்ஷாப் ஆகியவை திறந்திருந்தபோது அவை சட்டத்திற்கு புறம்பானவை என மத்தியிலிருந்து அறிவுறுத்தல் வந்தபோது சலூனும் பணிமனையும் மூடப்படுகின்றன. கேரளத்தின் வாசிப்பு பண்பாடு சார்ந்து நமக்கு சிலவற்றை முக்கியமாக உணர்த்துகிறது. ‘இன்றைய மலையாள நாவல்கள்’ அமர்வில் சுபாஷ் சந்திரன் பேசினார். உலகளாவிய கருப்பொருட்கள் மலையாள நாவல்களில் பேசப்படுவதை கூறினார்கள். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு பல படைப்புகள் வந்துள்ளன, பதிலுக்கு இங்கிருந்து மலையாளத்திற்கு படைப்புகள் போகவில்லையே எனும் கேள்விக்கு ‘தமிழே மலையாளத்தின் வேர். ஆனால் தமிழிலிருந்து துண்டித்துக்கொள்ள மலையாள கருத்துலகம் விழைகிறது. அது பிழையானது.’ என்றார் சுபாஷ். கன்னட சிறுகதை விவாத அரங்கில் எங்களால் உரையாடலை  கவனிப்பது சிரமமாக இருந்தது. துளு, கொடவா, கொங்கணி, பியரி மொழி பற்றிய அரங்கிற்கு சென்றேன். சற்று உன்னிப்பாக கவனித்தால் தோராயமாக உரையாடலை புரிந்துகொள்ள முடிந்தது. ‘தெலுங்கில் பெண்களின் சுயசரிதை’ பற்றிய அமர்வு சுவாரசியமாக இருந்தது. மிருணாளினி, காத்யாயனி வித்மஹே, மல்லேஸ்வரி, ஜோதி ஆகியோர் பங்கேற்றார்கள். நல்ல தயாரிப்புடன் செறிவாக இருந்தது. தெலுங்கு இலக்கியத்தை பற்றிய பொது பார்வையை இந்த புக் ப்ரம்மா இலக்கிய விழா மாற்றியுள்ளது. தன்வரலாறில் பெண்கள் எந்த அளவு தணிக்கை செய்துகொள்கிறார்கள், துணிச்சலான  சித்தரிப்புகள் எழுதப்படுவதாலேயே ஒரு நூல் சிறந்ததாக ஆகுமா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. கணவர்களை பற்றி பெண்கள் எழுதும் நினைவு குறிப்புகளில் வரிகளுக்கு இடையே வாசிக்க இடமுண்டு என சில உதாரணங்களை காட்டினார்கள். ‘தெலுங்கில் உள்ள விளிம்புநிலை குரல்கள்’ அமர்வில் ஜெகதீஷ் குமார், ஷெரிப் மற்றும் கோகு ஷ்யாமளா பங்கேற்றார்கள். அண்மையில்  தெலுங்கு எழுத்தாளர் ரமேஷ் நாயக் அமர்வை நடத்தினார். ரமேஷ் நம்பிக்கையூட்டும் கவி.  பழங்குடி இனத்தை சேர்ந்த தெலுங்கு கவிஞர். சீரிய அழகியல் நோக்கும் அரசியல் புரிதலும் கொண்டவர். வருங்காலத்தில் பெரிதாக பேசப்படுவார் என  நம்புகிறேன்.மலைப்பகுதியில் மருந்துகள் வந்து சேர்வதற்கு முன்னர் மது புட்டிகள் வந்துவிட்டன என தனது அங்கலாய்ப்பை பதிவுசெய்தார். தன்  மண்ணையும் மக்களையும் எழுதுவதே தன் கடைமை என்றார். ஜெயமோகனின் அறம் ‘நெம்மி நீலம்’ எனும் தலைப்பில் அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் சாயா  பதிப்பகத்தால் தெலுங்கில் வெளியிடப்பட்டது. விவேக் ஷான்பாக், வசுதேந்திரா, மிருணாளினி பேசினார்கள்.  எதிர்பாராத அளவிற்கு தெலுங்கில் இந்த தொகுப்பு வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் எப்போதும் அவரை சூழ்ந்து உரையாடினர். வெளியீட்டிற்கு கொண்டுவந்திருந்த ஐம்பது பிரதிகளும் விற்றுப்போயின என்றார் பாஸ்கர்.    


தொடக்கவிழாவில் ஹெச்.எஸ். ஷிவப்ரகாஷ், விவேக் ஷான்பேக், ஜெயமோகன், வோல்கா ஆகியோர் பங்கேற்ற அமர்வில் சுருக்கமாக தமிழில் நிகழும் இரு போக்குகள் குறித்து ஜெயமோகன் பேசினார். அவரது அவதானிப்பையொட்டி மறுநாள் சிறுகதை அரங்கில் பேசினோம். இக்காலகட்டத்தின் முதன்மை சிக்கல் என்பது வெறுமை. ஆனால் அது எழுபது எண்பதுகளின் பற்றாக்குறையால் விளைந்த வெறுமையல்ல. மாறாக எல்லாவற்றின் மிகையால் விளைந்த வெறுமை. Problem of plenty. இந்த வெறுமையே இன்றைய காலத்தின் தத்துவ சிக்கல். அதை நேர்கொண்டு எழுதுவது ஒரு போக்கு என்றால் அங்கிருந்து ஆன்மிகமான நன்னம்பிக்கையும் லட்சியவாதத்தையும் நோக்கிச் செல்வது இன்னொரு போக்கு. விஷால்ராஜாவின் கதைகளை மானுடத்தின் மீதான நன்னம்பிக்கையை பேசும் கதைகள் என  சொல்லலாம். ரம்யா ஆண்டி சுப்பிரமணியம், பாலாமணி, இடா ஸ்கட்லர் போன்ற கதை மாந்தர்களைக்கொண்டு எழுதிய கதைகளை லட்சியவாத கதைகள் என சொல்லலாம். அஜிதனின் மைத்ரி, அல் கிஸா, மருபூமி போன்றவற்றை மேற்சொன்ன வரிசையில் வைக்க முடியாது. அவை சரத்சந்திரரின் வங்காள நாவல்களின் நவீன வடிவம் என சொல்லத் தோன்றுகிறது. கற்பனாவாதமென்பது எல்லா காலங்களிலும் இணையான மெல்லிய சரடாக உடன் பயணித்து வரும் போக்கு என்பதே என் பார்வை. பாலோ கொயெல்ஹோவின் ரசவாதி, ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல் போன்றவை நவீனத்துவ காலகட்டத்தின் போது எழுதப்பட்டவைதான். அஜிதனின் இந்த நவ கற்பனாவாத கதைகளும் கூட ஏதோ ஒருவகையில் அந்த வெறுமையின் பள்ளத்தை  நிரப்பும் முயற்சிதான். அஜிதன் தனித்த பாதையில் செல்கிறார். அது ஒரு தனிப்போக்காக மாற வேண்டுமென்றால் அவரைப்போல மூன்று நான்கு பேர் எழுத வேண்டும். ஜெ முன்வைத்த வாழ்வின் தத்துவமற்ற வாழ்வின் நுன்மையை பேசும் அழகியல் தரப்புக்கு நான் சரியான பிரதிநிதியா எனும் ஐயம் எனக்குள்ளது.  


 ஜெயமோகனுக்கு புக் ப்ரம்மா வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் இந்த விருது அறிவிப்பை இத்தனை ரகசியமாக பேண வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். சுசித்ராவுடன் ஒருமணிநேரம் ஆங்கிலத்தில் தங்குதடையின்றி உரையாடினார். இந்திய ஆங்கில இலக்கியத்தின் மேம்போக்கான தன்மை குறித்து பேசினார். ஜெ தன்னை செவ்வியல் மரபின் தொடர்ச்சியாகவே எப்போதும் முன்வைப்பவர். இம்மேடையில் தன்னை  Bard என்றே முன்வைத்தார். வாழ்க்கையை பாடும் கவி. அவரது கோணத்திலிருந்து காஃப்காவையும் காமுவையும் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் மனிதர்  என்பவர்  குழு என்பதிலிருந்து புத்தொளி காலகட்டத்தின் வழியாக பயணித்து தொழில் புரட்சியையும் முதலீயத்தையும் கடந்து தனது சுயத்தை கண்டடைந்துள்ளார். தனி மனிதர் எனும் கருத்தை வந்தடைய இத்தனை ஆயிரம் ஆண்டுகால பரிணாமத்தை கடந்து வரவேண்டியிருக்கிறது. ஆகவே தனி மனித பிரக்ஞையை அத்தனை எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது என்றே கருதுகிறேன். தனி சுயத்திற்குள் அடுக்குகளாக புதைந்திருக்கும் பொது சுயத்தை கண்டுகொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதையே ஜெயமோகன் பேசுகிறார் என்றும் எண்ணுகிறேன். துண்டிக்கப்பட்ட தனி சுயம் என ஏதுமில்லை என்பதே அவரது வாதம். அது உண்மையும் கூட. ஏதேனும் பேரழிவு ஏற்பட்டு சொற்ப மனிதர்கள் மட்டும் எஞ்சியிருந்தால் தனிமனித சுயத்தை விட்டுக்கொடுத்து பிழைத்திருக்கும் வழியை பார்க்கக்கூடும். தனி சுயம் பொது சுயம் இவ்விரு நிலைகளுக்கு இடையேயான சமன்பாடு முக்கியமானது. தனி மனிதர் எனும் கருத்தாக்கம் இருக்கும்வரை அவரை வழிநடத்தவும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் அமைப்புகள் இருக்கும்வரை காப்காவும் காமுவும் இருப்பார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இந்திய அழகியல் பற்றிய உரையாடலின் போது அனந்தமூர்த்தி நல்ல எழுத்தாளர் ஆனால் அவரைவிட பைரப்பாவே சிறந்த எழுத்தாளர் என்றார். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அசோகமித்திரனை இந்தியத்தன்மை குறைந்த எழுத்தாளர் என சொன்னது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தியத்த்ன்மையின் மிக முக்கியக்கூறு அதன் ‘உள்ளடக்கும் தன்மை’. இந்தியத்தன்மை என நாம் சொல்வதே பல்வேறு பண்பாட்டுக்களின் தாக்கத்தினால் தொடர்ந்து உருமாறும் பண்பாட்டைத்தான். நவீன இலக்கிய வடிவத்தை நாம் மேற்கத்திய இலக்கியத்திலிருந்து உரையாடி பெற்றுக்கொண்டோம். நமக்கான தனிவழிகளில் பயணிக்கிறோம். ஹெமிங்வேயோ, வுட்ஹவுசோ தமிழ் அகத்துடன் உரையாடி தமிழ் வாழ்க்கையை காணவும் எழுதவும் ஒரு கருவியாக ஆகிறார்கள் என்பதே உண்மை. அசோகமித்திரன் இந்திய ஆங்கில எழுத்தாளர் போல தனக்கு தெரியாத வாழ்க்கையை அந்நியமாக எழுதவில்லை. அவர் பார்த்த, புழங்கிய கீழ் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்வையே எழுதினார். ஜெ எப்படி தன்னை bard என பிரகடனப்படுத்துகிறாரோ அப்படி அசோகமித்திரன் சாமானிய மனிதர்களின் கதைகளை சொல்லும் bard. முன்னர் ஒரு நேர்காணலில் தனது கதைகள் சாமானியர்களுக்கான புகழஞ்சலி (tribute) என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. அவரும் இந்திய வாழ்க்கையை, இந்தியர்களின் வாழ்க்கையையே எழுதினார். ‘ஒற்றன்’ ‘18 ஆவது அட்சக்கோடு’ என நாவல்களில் பொதுவாக அவருடன் தொடர்புபடுத்தப்படும் கட்டுக்கோப்பை மீறி வெளிப்பட்ட தருணங்கள் உண்டு. ‘பிரயாணம்’ மாதிரியான மறைஞான கதைகளை எழுதியுள்ளார். அவரது அழகியல் நிலைப்பாடு அவரெழுதிய வாழ்க்கையின் நம்பகத்தன்மையை குலைக்காது. எனது பாதை என்பதை ஜெக்கும் அமிக்கும்  இடைப்பட்ட பாதையாக காண்கிறேன் என்பதால் என்னால் இருவரின் அழகியலையும் புறம் தள்ள முடியாது. 


வயிறை பதம்பார்க்காத எளிய உணவுகள், இனிமையான சூழல், நண்பர்கள், நல்ல நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் கடந்ததே தெரியவில்லை. தமிழ் அமர்வுகளை பாவண்ணன் ஒருங்கிணைத்துள்ளார். அழைக்கப்பட்டவர்கள் பற்றியும் விடுபட்டவர்கள் பற்றியும் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்ததை கவனித்தேன். சாகித்ய அகாடமியின் சில கூட்டங்களுக்கு சென்றவன் என்ற முறையில் தமிழ் நவீன இலக்கிய வெளிக்கு வெளியே தொடர்பே அற்று இருப்பவர்கள் பலரை கூட்டங்களில் சந்தித்து வியந்திருக்கிறேன். தமிழ் நவீன இலக்கிய வெளியில் இருந்து எவர் அழைக்கப்பட்டாலும் சரிதான் என்பதே என் நிலைப்பாடு. மொழியை, கருத்துக்களை சரியாக பிரதிநித படுத்துகிறாரா என்பது மட்டுமே கேள்வி.   அழைக்கப்பட்டவர்களில் எனக்கும் சிலரின் மீது விமர்சனங்கள் உண்டு. பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தால் நான் வேறு எழுத்தாளர்களை அழைத்திருப்பேன். இப்படி ஒவ்வொரு எழுத்தாளரும் சிலரை அழைக்கக்கூடும். இது நாற்பது ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர் பாவண்ணனின் தேர்வு. அதற்கப்பால் விவாதிக்க ஏதுமில்லை. இலக்கிய கூடுகைகளுக்கு  கொஞ்ச நாட்களுக்கு ரத்தம் சூடாகி நாடி நரம்பு முறுக்குடன் இருக்கும். படிக்காமல் விட்ட தடித்தடி புத்தகங்கள் என்னை அழைக்கின்றன. பார்ப்போம்.